உள்ளூர் செய்திகள்

கிராம செவிலியர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்தபடம்.

நெல்லை மாவட்டத்தில் இளம் வயது திருமணம் அதிகரித்துள்ளது-குழந்தைகள் நல குழும தலைவர் கவலை

Published On 2022-08-04 09:46 GMT   |   Update On 2022-08-04 09:46 GMT
  • செவிலியர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்கும் முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • நெல்லை மாவட்டத்தில் பதின் பருவ கர்ப்பம் மற்றும் இளம் வயது திருமணம் அதிக அளவில் நடந்து வருகிறது.

நெல்லை:

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பில் போதை இல்லா இந்தியாவை உருவாக்கும் திட்டத்திற்கான கிராம செவிலியர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் கிருஷ்ணலீலா தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்களுக்கு 4 கட்டமாக பயிற்சி அளிக்கும் முகாம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

கிராம சுகாதார செவிலியர்கள் கிராமப்புற மக்களின் அனைத்து மருத்துவ தேவைகளையும் அறிந்து செயல்பட்டு வரும் சூழலின் காரணமாக அவர்களிடம் இணக்கமாக பழகும் நிலை உருவாகும் என்பதால் போதை இல்லா இந்தியாவை உருவாக்க கிராம பகுதியில் வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பதின் பருவ கர்ப்பம், இளம் வயது திருமணம் உள்ளிட்டவைகளை கண்டறிந்தால் அவர்களுக்கு மருத்துவ ரீதியாக ஆலோசனை வழங்குவதுடன் பாதுகாப்பு வழங்வகுதற்கான முயற்சி களை அரசு சார்பில் மேற்கொள்ள உதவுவது எப்படி என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட குழந்தைகள் நல குழும தலைவர் சந்திரகுமார், நெல்லை மாவட்டத்தில் பதின் பருவ கர்ப்பம் மற்றும் இளம் வயது திருமணம் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளேன்.

அதனை தடுக்கும் முயற்சியை மேற்கொள்வதுடன் பதின் பருவ கர்ப்பம் அடைந்த நபர்களை கண்டறிந்தால் அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளவும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட வைகளை அளிப்பதற்கு உதவி செய்யவும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்து அவர்களையும் சமூகத்தில் நல்ல நிலைக்கு கொண்டு செல்ல கிராம சுகாதர செவிலியர்கள் உதவிட வேண்டும் என பேசினார்.

Tags:    

Similar News