உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள வள்ளியம்மை பஜாரின் முன்பு வரிபாக்கி செலுத்தாததால் மாநகராட்சி சார்பில் குப்பைத்தொட்டி வைக்கபட்டுள்ளதை படத்தில் காணலாம்

கடலூரில் நூதன முறையில் வரி வசூல்: வியாபாரிகள் அதிர்ச்சி

Published On 2022-12-22 08:50 GMT   |   Update On 2022-12-22 08:50 GMT
  • கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாடகை பாத்திரம் குடோன் உரிமையாளர் சொத்து வரி கட்டாததால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
  • வரி வசூல் செய்வதற்கு நூதன முறையில் குப்பை தொட்டிகளை வள்ளியம்மை பஜார் முன்பு வைக்கப்பட்டன.

கடலூர்:

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, குடிநீர் வரி, மாநகராட்சி கடை வாடகைகள் உள்ளிட்ட பல்வேறு வரிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில், மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் தலைமையில், அதிகாரிகள் தீவிர வரி வசூல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாடகை பாத்திரம் குடோன் உரிமையாளர் சொத்து வரி கட்டாததால் கடைக்கு சீல் வைத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வரிகள் மற்றும் மாநகராட்சி கடை வாடகையை உடனடியாக கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்‌. இந்த நிலையில் கடலூரில் மிக முக்கிய சாலையாக இருந்தவரும் லாரன்ஸ் சாலையில் வள்ளியம்மை பஜார் உள்ளது.

இங்குள்ள ஒரு சில கடைகளுக்கு சொத்து வரி பாக்கி இருப்பதாக மாநகராட்சி சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு, வரி கட்ட வேண்டும் என வலியுறுத்தப் பட்டு வந்தனர். இன்று காலை கடலூர் மாநகராட்சி சார்பில் வரி வசூல் செய்வதற்கு நூதன முறையில் குப்பை தொட்டிகளை வள்ளியம்மை பஜார் முன்பு வைக்கப்பட்டன. இதனை பார்த்த வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பொதுமக்கள் வியாபாரிகள் உள்ளிட்ட யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் வியாபாரிகள் தரப்பில் கடலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடலூர் மாநகராட்சியில் தற்போது 78 கோடிக்கு மேல் வரி பாக்கி உள்ள நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் வசூலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நூதன முறையில் வியாபாரிகள் வரி கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News