உள்ளூர் செய்திகள்

கல்பாக்கம் அருகே வளைவில் திரும்பியபோது லாரியின் மேல் தூங்கிய வாலிபர் பலி

Published On 2023-05-30 07:06 GMT   |   Update On 2023-05-30 07:06 GMT
  • இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய்தார்.
  • ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார்.

மாமல்லபுரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சி.வன்னியூர் பகுதியை சேர்ந்தவர் இளஞ்சூரியன் (வயது27). அப்பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டிகள் தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் சிமெண்ட் தொட்டிகள், சிலாப்களை லாரியில் ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வந்து கொண்டு இருந்தார்.

இளஞ்சூரியன் லாரியின் மேல்பகுதியில் படுத்தபடி பயணம் செய்தார். கல்பாக்கம் அடுத்த ஆரம்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது ஒரு வளைவில் லாரியை டிரைவர் திருப்பினார். இதில் நிலை தடுமாறிய லாரியின் மேல்பகுதியில் படுத்து இருந்த இளஞ்சூரியன் தவறி நடுரோட்டில் கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை நிறுத்தினார்.

பின்னர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய இளஞ்சூரியனை அவ்வழியே சென்றவர்கள் உதவியுடன் மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் போகும் வழியிலேயே இளஞ்சூரியன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சதுரங்கபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News