உள்ளூர் செய்திகள்

வள்ளியூர் அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பல லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை

Published On 2023-05-21 10:18 IST   |   Update On 2023-05-21 10:18:00 IST
  • கடையை உடைத்து மதுபானங்களை கொள்ளையடித்து சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த வழக்கிலும் இதுவரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

நெல்லை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு வள்ளியூரில் இருந்து வடலிவிளை செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம் போல் விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு சென்றனர்.

இந்நிலையில் கடையின் காவலாளியான அதே பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 60) என்பவர் இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நள்ளிரவில் 3 பேர் கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பல் தேவராஜை பிடித்து அவரது வாயில் மதுவை ஊற்றியது. பின்னர் அவரை மிரட்டிவிட்டு கடையின் ஷட்டர் பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து உள்ளே சென்றது. அங்கிருந்த விலை உயர்ந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபான பாட்டில்களை சாக்கு பையில் கட்டிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து காவலாளி தேவராஜ் பணகுடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். கடையை உடைத்து மதுபானங்களை கொள்ளையடித்து சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கடந்த மாதம் 15-ந்தேதி இதே கடையில் காவலாளியை மிரட்டி ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் நான்கு சக்கர வாகனத்தில் கொள்ளையர்கள் ஏற்றி சென்றனர். இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை துப்பு துலங்கவில்லை.

இந்த பகுதியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வடக்கன்குளத்தில் கடந்த வாரம் இதேபோல் டாஸ்மாக் கடையை உடைத்து சுமார் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்மநபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அந்த வழக்கிலும் இதுவரை கொள்ளையர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை.

Tags:    

Similar News