உள்ளூர் செய்திகள்

பெண் தூய்மை பணியாளர் வெட்டிக்கொலை

Published On 2024-03-19 09:03 GMT   |   Update On 2024-03-19 09:03 GMT
  • தூய்மைப் பணியாளர் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி அருகே உள்ள மஞ்ச நீர் காயல் பகுதியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா. இவரது மனைவி கனகா(வயது 31). இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் தெற்கு மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது 3 குழந்தைகளுடன் கனகா மஞ்சள் நீர் காயலில் வசித்து வந்தபடி தூத்துக்குடியில் தூய்மை பணியாளராக வேலைக்கு சென்று வந்தார். அப்போது அவருக்கும், பசுவந்தனையை சேர்ந்த ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை கனகா வழக்கம்போல் வீட்டில் இருந்து பணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து தனியார் பஸ்சில் மஞ்சநீர் காயலில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கனகா, தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் உள்ள ஒரு கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஒருவர் கனகா அருகே வந்தார். திடீரென தனது கையில் வைத்திருந்த அரிவாளால் கனகாவின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பிச் சென்றார்.

இதில் கனகா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அந்த பகுதியில் நின்ற பயணிகள் கனகாவை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எப்போதும் வென்றான் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த ஒரு பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் தற்போது 2-வதாக பஸ் நிறுத்தத்தில் வைத்து தூய்மைப் பணியாளர் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News