உள்ளூர் செய்திகள்

அதிகாரம், பண பலத்தை இடைத்தேர்தலில் தி.மு.க. காட்ட தொடங்கி விட்டது- சீமான்

Published On 2023-01-25 13:16 IST   |   Update On 2023-01-25 13:16:00 IST
  • நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வருகிற 29-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார்.
  • தேர்தல் ஆணையத்தால் ஒரு மாநிலத்தில் ஒரே கட்டமாக கூட தேர்தல் நடத்த முடியவில்லை.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு இடைத்தேர்தல் களம் எனக்கானது, இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் ஆணையம் உள்ளதா என்பதை யாராவது கூற வேண்டும். தி.மு.க.வின் எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

எந்த தேர்தலிலும் நான் யாரிடமும் கூட்டணிக்காக நிற்கப் போவது கிடையாது, தனித்து தான் இருப்பேன். அதிகார பலம், பண பலத்தை ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. காட்ட தொடங்கிவிட்டது. இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று கூறி வேட்பாளரை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது, துணிச்சலான முடிவு வாழ்த்துக்கள்.

தேர்தலில் வெற்றி பெறுவது அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியும், சீமானால் முடியாதா? கமல்ஹாசன் கட்சி தொடங்கும் போது தனித்து தான் போட்டி என்று கூறினார். தற்போது அவர் காங்கிரஸ் பக்கம் சாய்வதாக தெரிகிறது. அதுபோன்று வரும் காலத்தில் நாங்கள் கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

பணத்தை பாதுகாப்பதற்கு அ.தி.மு.க.விற்கு பாரதிய ஜனதா தேவைப்படுகிறது. ஆனால் தேர்தலில் வாக்குகள் விழாது என்பதால் பா.ஜ.க.வை கழட்டி விட அ.தி.மு.க. நிற்கிறது

ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு யாரும் போட்டி கிடையாது. எத்தனை பேர் களமிறங்கினாலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது உறுதி. நான் தனித்து போட்டியிடுவேன் என்று ஒவ்வொரு தேர்தலிலும் கூறி தனித்து போட்டிட்டு வருகிறேன். இது போன்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று கூற முடியுமா?

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வருகிற 29-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார். தேர்தல் ஆணையத்தால் ஒரு மாநிலத்தில் ஒரே கட்டமாக கூட தேர்தல் நடத்த முடியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியமாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பேச்சுக்காக மட்டுமே தொடர் அமைக்க அது செயல்படுத்த முடியாது.

தி.மு.க. ஒரு நாடக கூட்டம். மத்திய அரசை, ஆளுநரை எதிர்ப்பது போல் எதிர்க்கும். ஆனால் தனியாக சென்று அவர்கள் காலில் விழும். அவரோடு சேர்ந்து உணவும் அருந்துவார்கள்.

குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் குறித்து எழுதிய கடிதத்தில் கூட அவரை மாற்ற வேண்டும் என்று கூறாமல், மாநில அரசின் நலன் கருதி எங்களோடு ஒத்துழைப்பு கொடுக்கச் சொல்லுங்கள் என்று தான் முதல்வர் கடிதம் எழுதினார்.

2024 ஆம் ஆண்டு நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆட்டத்தை பாருங்கள். தற்போது தமிழகத்தில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. இவர்கள் யாரும் தே.மு.தி.க. பக்கம் செல்லப்போவது கிடையாது. மாற்றம் தமிழகத்தில் ஏற்படும் என்று நான் நம்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News