உள்ளூர் செய்திகள்

கைதான அன்பழகன்


திசையன்விளையில் லஞ்சம் வாங்கி கைதான நில அளவையர் வீட்டில் போலீசார் சோதனை

Published On 2022-06-25 05:14 GMT   |   Update On 2022-06-25 05:14 GMT
  • கைது செய்யப்பட்ட அன்பழகன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சோழவந்தானை சேர்ந்தவர்.
  • கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் அவர் திசையன்விளைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகாலெட்சுமி(வயது 32).

இவர் தற்போது பாளையில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா மாற்றம் செய்யவேண்டி திசையன்விளை நில அளவையர் அன்பழகன்(வயது 40) என்பவரிடம் கேட்டிருந்தார்.

அதற்கு அவர் ரூ.6 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் அலுவலகத்தில் வைத்து அன்பழகனை கையும், களயுமாக கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்து சென்று சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவர் மணலிவிளையில் தங்கியிருந்த வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கு சுமார் 1 மணிநேரம் பல்வேறு ஆவணங்களை சோதனை செய்தனர். பின்னர் அன்பழகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட அன்பழகன் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சோழவந்தானை சேர்ந்தவர். கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் அவர் திசையன்விளைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News