உள்ளூர் செய்திகள்

கவுந்தப்பாடி அருகே பனியன் நிறுவன துணை மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-10-07 06:44 GMT   |   Update On 2022-10-07 06:44 GMT
  • கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சிங்காநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (33).

இவர் கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைகாரன் கோவிலில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

கிருஷ்ணமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதமாக கிருஷ்ணமூர்த்தி சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி அதில் ரூ.5 லட்சம் வரை பணத்தை இழந்து விட்டதாகவும், இதன் காரணமாக கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

எனினும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News