பெண்மையைப் போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்! - சீமான் #WomensDay வாழ்த்து
- பெண்கள் ஒடுக்கப்படும் வரை எவராலும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியாது.
- மகளிர்க்கான உரிமை என்பது அரசு வழங்கும் அற்பத்தொகையில் இல்லை.
உலக மகளிர் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
உலகின் உயிராற்றலாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் உலக மகளிர் நாளில் அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்!
"பெண்களின் முன்னேற்றத்தைக் கொண்டே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை அளவிட முடியும்" என்கிறார் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர்!
"பெண்கள் ஒடுக்கப்படும் வரை எவராலும் உண்மையான சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியாது. ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டுப் பெண்கள் நடத்தப்படும் விதத்தைப் பொறுத்தே அமைகிறது." என்கிறார் ஆப்ரிக்க மக்களின் விடுதலைக்குப் போராடிய நெல்சன் மண்டேலா!
"எந்தவொரு நாடு பெண்களை மதிக்கவில்லையோ, அந்த நாடு எக்காலத்திலும் உயர்ந்த நிலையை அடைய முடியாது. ஒரு பறவை ஒரு இறக்கையை மட்டும் வைத்துக்கொண்டு பறக்க முடியாது என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்!
"தையலை உயர்வு செய்" என்கிறார் நம்முடைய பாட்டன் பெரும்பாவலன் பாரதி!
"மங்கையர் அறிவால் இந்த மாநிலம் உயரும்!" என்கிறார் புரட்சிப்பாவலர் தாத்தா பாரதிதாசன்!
'மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!' என்று பெண்களைப் போற்றிக் கொண்டாடுகிறார் தாத்தா கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
'பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை!' எனக்கூறி பெண்ணியத்தின் பெருந்தேவையைப் பேரறிவிப்பு செய்கிறார் தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்.
பெண்ணிய விடுதலையும், பாலினச்சமத்துவமும் நீண்ட நெடுங்காலமாகவே பேசப்படுபொருளாக இருக்கிறதே ஒழிய, செயலாக்கம் பெறவில்லை. ஆனால், அதனை ஈழத்தாயகத்தில் சாத்தியப்படுத்தி நிறுவிக்காட்டினார் நம்முடைய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அவர்தம் பிள்ளைகள் அதனை தமிழ்நாட்டில் செயற்படுத்த அணியமாகி நிற்கிறோம்.
ஐக்கிய நாடுகள் அவை 2026-ஆம் ஆண்டு மகளிர் நாளுக்கான மையக்கருத்தாக "எண்ணியல் யுகத்தில் பாலின சமத்துவம்: பெண்களுக்கான அதிகாரமளித்தல் மற்றும் புதுமை" என்ற முழக்கத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கடந்த 2016 ஆம் ஆண்டு, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே உலகில் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் செய்திடாத செயற்கரிய செயலாக தமிழ்நாடு மாநில சட்டமன்றத்தேர்தலில் சரி பாதி இடங்களில் பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தி, உண்மையான பாலின சமத்துவம் என்பது பெண்களுக்கான அதிகாரமளித்தல்தான் என்ற உண்மையைச் செயலில் நிறுவியது.
அது வெறும் சோதனை முயற்சியல்ல, சாதனை முயற்சி என்பதை அடுத்து வந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத்தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களிலும் தொடர்ந்து உலகிற்கு உணர்த்தியது. இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும் அந்த சாதனையைத் தொடர்கிறது நாம் தமிழர் கட்சி. இது பெண்களுக்கு நாம் தமிழர் கட்சி தரும் சலுகை அல்ல; பெண்களுக்கான உரிமையை பெண்களையே எடுத்துக்கொள்ளச் செய்யும் நம் இனத்திற்கான பெருமை.
அடிமைத் தனத்திற்கும், உரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடி, மெல்ல மெல்ல மேலெழுந்து வரும் பெண்களை அடக்கி ஒடுக்கும் விதமாக, அண்மைக்காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்கிப்பெருகி வருவது பெண்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பான வாழ்வினைக் கேள்விக்குறியாக்குவதாகவும் உள்ளது. பெண்களுக்கு எதிரான இக்கொடுமைகள் ஒழிய பெண்களுக்கு அரசியல் அதிகாரப்பகிர்வை தருவது மட்டுமே நிலைத்த தீர்வாக அமையும். ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆளும் அரசோ மாதம் 1000 ரூபாய் தொகையைத் தருவதை மகளிர் உரிமைத் தொகை என்கிறது.
ஏற்கனவே ஆண்ட கட்சியோ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம் என்கிறது. ஒரு நாளைக்கு அரசு வழங்கும் வெறும் 33 ரூபாய் தொகைதான் மகளிர்க்கான உரிமையா? அந்தத் தொகையும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும்தான், வேலைக்குச் செல்லும் பெண்களுக்குக் கிடையாது என்கிறது அரசு. எந்த வேலைக்குச் செல்லும் பெண் வீட்டில் வேலை செய்யாமல் இருக்கிறார்? உண்மையில் அவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு அந்த குறைந்தபட்ச தொகையும் பெற தகுதி இல்லை என்பதை எந்த அளவுகோலை வைத்து முடிவு செய்கிறது அரசு? மகளிர்க்கான உரிமை என்பது அரசு வழங்கும் அற்பத்தொகையில் இல்லை. மக்கள் தொகையில் சரிபாதி உள்ள 'மகளிர் தொகை'க்கேற்ப சம அதிகாரம் அளிப்பதே உண்மையான மகளிர் உரிமையாகும்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மட்டும் சரிபாதி பெண்கள் அல்ல; கட்சி கட்டமைப்பிலும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் முதல் மண்டலச் செயலாளர் வரை பெண்களுக்குச் சமமான வாய்ப்பை வழங்குகின்றது நாம் தமிழர் கட்சி. உலகத்திலேயே பாலின சமத்துவத்தைக் கடைபிடிக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. இதை ஏதோ வீண் பெருமைக்காகச் செய்யவில்லை. இது எங்களின் வரலாற்றுக் கடமை என எண்ணிச் செய்கிறோம்.
பெண்களுக்கு என்னென்ன உரிமைகள் தரவேண்டும், எவ்வளவு தர வேண்டும் என்ற அதிகாரத்தைத் தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, சட்டங்களை ஆண்களே இயற்றுவது அல்ல பாலின சமத்துவம்; தங்களுக்குத் தேவையான சட்டத்தைத் தாங்களே இயற்றிக்கொள்ளும் அதிகாரத்தைப் பெண்களிடம் அளிப்பதுதான் உண்மையான பாலின சமத்துவமாகும். எனவேதான் நாம் தமிழர் கட்சி ஆணுக்குப் பெண் சமமல்ல; ஆணும் பெண்ணும் சமம்! என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து அரசியல் களத்தில் நிற்கிறது. அதன் அடுத்த படிநிலையாக பெண்கள் மட்டுமே போட்டியிட்டு வெற்றிபெறக் கூடிய வகையில் பெண்களுக்கெனத் தனிச் சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டையும் முன்வைத்து நாம் தமிழர் கட்சி போராடுகின்றது.
எமக்கு ஒரு பெருங்கனவு உண்டு. இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்களிலும், இந்திய பெருநாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், சரிபாதி பெண்கள் அமர்ந்து அவைகள் நடைபெற வேண்டும் என்ற பெருங்கனவு எனக்கு உண்டு. அந்த நாள் வருகின்ற நாளே இந்த நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் உண்மையான சம உரிமைப்பெற்ற நாளாகும். அதற்கான வரலாற்று வழிதடத்தை நாம் தமிழர் கட்சி தம்முடைய கட்சி கட்டமைப்பு முதல் தேர்தல் வேட்பாளர்கள் வரை சரிபாதி பெண்களை நிறுத்தும் செயல்களால் செப்பனிட்டு வருகிறது.
ஒரு நாட்டில் வாழும் குடிமக்களின் அனைத்து உரிமைகளையும் தீர்மானிப்பது அரசு; அந்த அரசைத் தீர்மானிப்பது அரசியல்; எனவே கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு பெறுவது மட்டுமல்ல; அதிகார மையமான அரசியலில் பெண்கள் சம வாய்ப்பை பெற்று சம பங்களிப்பை என்றைக்கு செய்கிறார்களோ அந்த நாள்தான் உண்மையான மகளிர் நாளாக அமையும்.
அத்தகைய பெருமைமிக்க நாள் விரைவில் மலர்ந்திட உலகெங்கும் வாழும் மகளிர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்! பெண்மையை போற்றுவோம்! பெருமைக்குரிய நாடாக மாற்றுவோம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.