#TNAssemblyElection கூட்டணி குறித்து ஓரிரு நாளில் முடிவு - ராமதாஸ்
- என்னுடைய ஆசை 15 ஆண்டுகள் பெண்களே முதலமைச்சராக வர வேண்டும்.
- மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
மகளிர் இந்த நாட்டை ஆள வேண்டும். மகளிரை இழிவுப்படுத்திய காலம் சென்று மகளிர் மேம்பாட்டுக்காக மகளிரே முன் வந்து திட்டங்களை தீட்ட வேண்டும். அப்படிப்பட்ட காலம் வர வேண்டும்.
என்னுடைய ஆசை 15 ஆண்டுகள் பெண்களே முதலமைச்சராக வர வேண்டும். 3 முறை பெண்களே முதலமைச்சராக வர வேண்டும். அதே போன்று சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரும் பெண்களாக இருக்க வேண்டும்.
அது நடக்குமா? சாத்தியமா? ஆண்கள் விடுவார்களா? சட்டம் இடம் கொடுக்குமா? என பல கேள்விக்குறிகள் மத்தியில் தான் மகளிர் சமூகம் வாழ்ந்து வருகிறது. மகளிர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவரிடம் நிருபர்கள் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யப்பட்டதா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, இன்னும் ஓரிரு நாட்களில் தெரிய வரும் என்றார்.
நாளை சென்னை உரிமையியல் நீதி மன்றத்தில் வரும் கட்சி தொடர்பான வழக்கு குறித்த கேள்விக்கு நல்லபடியாகவே நடக்கும் என்றார்.