#MekedatuDam டெல்டா விவசாயிகளுக்கு தி.மு.க. துரோகம் செய்துள்ளது - அண்ணாமலை
- ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது.
- கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் குறைவான பேருக்கு தான் அரசு வேலை கொடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பொள்ளாச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக சமையல் எரிவாயு விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டு ரூ.913-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் எல்.பி.ஜி. இணைப்புகள் வெறும் 14 கோடி மட்டும் இருந்தது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் 33 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. பயன்பாடு அதிகமாக இருப்பதால் 45 சதவீதம் கியாஸ் மட்டும் இறக்குமதி செய்யப்படுகிறது. பிரதமர் மோடி விலையை ஏற்றக்கூடாது என்று முயற்சி செய்து வைத்திருந்தார். ஆனால் சர்வதேச சந்தையில் விலை உயரும்போது, வேறு வழியில்லாமல் விலையை ஏற்ற வேண்டிய நிலை உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியாக அளித்த கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. தற்போது சர்வதேச அளவில் விலை உயர்ந்துள்ளது. எனவே ரூ.100 மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா, மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை சட்டமன்றத்தில் அறிவித்து இருக்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை மேகதாது அணையை கட்டக்கூடாது. அணையை கட்டினால் டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். காங்கிரஸ் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் டெல்டா விவசாய நலனை அடமானம் வைத்து விட்டாரா? என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியான பிறகு சொல்கின்றனர். இதை பார்க்கும்போது மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்ததை போன்று தெரிகிறது. டெல்டா விவசாயிகளுக்கு தி.மு.க. துரோகம் செய்துள்ளது.
ஆட்சிக்கு வந்தால் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்போம் என்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கும் குறைவான பேருக்கு தான் அரசு வேலை கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.