உள்ளூர் செய்திகள்
தர்மலிங்கம்

இளம்பெண்ணின் ஆபாச படத்தை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி- ஒருவர் கைது

Published On 2022-08-15 05:41 GMT   |   Update On 2022-08-15 05:41 GMT
  • பவானி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்தனர்.
  • பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

சித்தோடு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த ஒலகடம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 43) தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தர்மலிங்கம் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அவர்களின் 20 வயது மகளுடன் தர்மலிங்கத்திற்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தர்மலிங்கம் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி அந்த பெண் வீட்டார் இவரை விரட்டி உள்ளனர்.

பின்னர் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அப்போது வீடியோ காலில் அந்தப் பெண்ணின் படத்தை தர்மலிங்கம் ஆபாச முறையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்தப் பெண் அடிக்கடி யாரிடமோ செல்போனில் பேசி வருவதை கவனித்த அந்தப் பெண்ணின் பெரியப்பா மகன் அந்தப் பெண்ணிடம் இருந்து செல்போனை பறித்து யாரிடம் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டுள்ளார்.

பின்னர் அந்த செல்போனை தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சரண்குமார் என்பவரிடம் கொடுத்து எனது உறவுக்கார பெண் அடிக்கடி ஒருவரிடம் செல்போனில் பேசி வருகிறார். அவர் யார்? செல்போனில் ஏதாவது படங்கள், வீடியோக்கள் இருக்கிறதா? என்று கண்டுபிடித்து தன்னிடம் கூற வேண்டுமென்று சரண்குமாரிடம் அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் சரண்குமார் அந்த செல்போனை எடுத்துக்கொண்டு சோதனை செய்து பார்த்தபோது. அதில் அந்த உறவுக்கார பெண்ணும் தர்மலிங்கமும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இருந்ததை கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து சரண்குமார் பணம் பறிக்க முடிவு செய்தார்.

அதன்படி தர்மலிங்கத்திற்கு போன் செய்து நீயும், அந்தப் பெண்ணும் ஒன்றாக இருக்கும் படத்தை சமூக வலைதலங்களில் வெளியிட்டு விடுவேன். அப்படி வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இதேபோல் சரண்குமார் அந்த பெண்ணிற்கும் போன் செய்து நான் சொல்வது போல் நீ நடக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்தப் பெண் இது குறித்து பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தர்மலிங்கம் மற்றும் சரண்குமார் மீது புகார் செய்தார்.

இதன் பெயரில் பவானி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார். சரண்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News