உள்ளூர் செய்திகள்

கொள்ளையர்களால் உடைக்கப்பட்ட உண்டியல்களை படத்தில் காணலாம்.

விழுப்புரம் அருகே வரதராஜபெருமாள் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை

Published On 2023-02-11 06:04 GMT   |   Update On 2023-02-11 06:04 GMT
  • கோவில் பிரதான சாலையில் இருப்பதால் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் வந்தனர்.
  • கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.

விக்கிரவாண்டி:

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி கடைவீதியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.

நேற்று இரவு வழக்கம்போல் பூசாரி பூஜை முடிந்து கோவில் நடை சாத்தி விட்டு கதவை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று இரவு மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கோவில் கதவினை கடப்பாரையால் நெம்பி திறந்தனர். பின்னர் கடப்பாரையால் உண்டியல்களின் பூட்டுகளை உடைத்தனர். பின்னர் உண்டியல்களில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கோவில் பிரதான சாலையில் இருப்பதால் காலையிலேயே ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர், மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News