உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் அருகே 2½ வயது குழந்தை அடித்துக்கொலை- வாலிபர் கைது

Published On 2022-12-31 05:16 GMT   |   Update On 2022-12-31 05:16 GMT
  • ராகுல் ஏன் குழந்தையை கொன்றான் என்ற விவரம் போலீசார் விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும்.
  • குழந்தை தருண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சீராப்பள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கபில் வாசன் (வயது 32). இவரது மனைவி ராஜாமணி (24). இந்த தம்பதிக்கு நவியா ஸ்ரீ (5) என்ற பெண் குழந்தையும், தருண் (2 1/2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

கபில்வாசன் அந்த பகுதியில் உள்ள சேகோ ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் அவர்களது உறவினர் தியாகராஜன் என்பவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வருகின்றனர். கபில்வாசன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மனைவி ராஜாமணி மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் குழந்தை தருண் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறான்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த கபில் வாசனின் உறவினர் பாலமுருகன் என்பவரது மகன் ராகுல் (23) என்பவர் நேற்று இரவு கபில் வாசனின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வாலிபர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். ராஜாமணி தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்றுள்ளார்.

அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத விதமாக தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தருண் கழுத்தில் வாலிபர் ராகுல் கையால் அடித்தும் காலால் உதைத்தும் நெஞ்சில் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை தருண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். உடனடியாக குழந்தையை ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் காண்பித்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை தருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு குழந்தை தருணை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து டாக்டரிடம் காண்பித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதன் பேரில் குழந்தை தருண் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராகுலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இனஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ராகுல் ஏன் குழந்தையை கொன்றான் என்ற விவரம் போலீசார் விசாரணைக்கு பிறகு தான் தெரியவரும். குழந்தை தருண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். குழந்தையின் உடலை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது. 

Tags:    

Similar News