உள்ளூர் செய்திகள்

கனமழை வெள்ளத்தால் 7 ஆயிரம் வீடுகள் சேதம்

Published On 2023-12-29 10:07 GMT   |   Update On 2023-12-29 10:08 GMT
  • நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளதால் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
  • மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17-ந் தேதி பெய்த வரலாறு காணாத மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

நெல்லை மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் அணைகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பல்வேறு குளங்களில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தனித் தீவுகளாகின. பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமல் பொது மக்கள் அவதி அடைந்தனர். ஏராளமான குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது.

தற்போது மீட்பு பணிகள் பெரும்பாலும் முடிவடைந்து பொது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். எனினும் சில இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை அகற்றும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மீட்பு பணியில் ஈடுபட்ட மீட்பு அதிகாரிகள் கூறியதாவது:-

கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளில் இருந்து கடந்த 18,19-ந் தேதிகளில் தாமிரபரணியில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தின் கடைசி அணைக்கட்டிற்கு 1.65 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

மழை வெள்ளத்தால் 7,417 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதே போல் 2,785 மாடுகள் உள்ளிட்ட 1 லட்சத்து 7 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இதே போல் 2 லட்சத்து 34 ஆயிரத்து 602 ஏக்கர் நிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 20 நிவாரண மையங்களில் 6,500 பேர் தற்போதும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் இப்பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளதால் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News