முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகை-பணம் கொள்ளை
- பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 33 சவரன் தங்க நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.
- கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது யார் என கண்டறிய கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டது.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசக்தி (வயது40). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சிவசக்திக்கு கமலா என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் சேலம் அருகே தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக சிவசக்தி பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 19-ம் தேதி திருவயலூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு கணவன், மனைவி இருவரும் சேலத்திற்கு சென்று அங்கேயே தங்கியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 33 சவரன் தங்க நகைகள், ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசில் சிவசக்தி புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது யார் என கண்டறிய கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டது. அவர்கள் கொள்ளையர்களின் கைரேகை பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்தனர்.