உள்ளூர் செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபரின் நிலத்தை அபகரிக்க முயற்சி: பா.ஜ.க பிரமுகர் உள்பட 3 பேர் கைது

Published On 2023-09-21 10:01 IST   |   Update On 2023-09-21 10:01:00 IST
  • தற்போது கொடைக்கானலுக்கு வந்த ராமாராவ் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
  • போலீசார் விஜயகுமார், ரகு, பிரபுதேவா ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

கொடைக்கானல்:

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ராமாராவ்(60). இவர் கடந்த 37 ஆண்டுகளாக கொடைக்கானலில் தங்கி நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 120 ஏக்கர் நிலம் மேல்மலை கிராமமான கிளாவரை பகுதியில் அக்கரைகாட்டில் உள்ளது.

அங்கு இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு தனது சொந்த பிரச்சனை காரணமாக ராமாராவ் குடும்பத்துடன் ஆந்திரா சென்றுவிட்டார். அப்போது தனது 120 ஏக்கர் நிலத்தை வேலி அமைத்து பார்த்து கொள்ளுமாறு நாயுடுபுரத்தை சேர்ந்த விஜயகுமாரிடம் தெரிவித்து சென்றார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட விஜயகுமார் மற்றும் அவரது நண்பர் ரகு ஆகியோர் அந்த நிலத்தில் விவசாயம் செய்து மகசூல் எடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கொடைக்கானலுக்கு வந்த ராமாராவ் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

எனவே தனது நிலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு அவர் கூறினார். அதற்கு விஜயகுமார், ரகு மற்றும் பா.ஜ.க பிரமுகர் பிரபுதேவா ஆகியோர் சேர்ந்து ராமாராவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அவரை இனிமேல் நிலத்திற்குள் வரக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் ராமாராவ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விஜயகுமார், ரகு, பிரபுதேவா ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News