உள்ளூர் செய்திகள்

விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தி.மு.க. கவுன்சிலர் கைது

Published On 2026-03-03 14:04 IST   |   Update On 2026-03-03 14:04:00 IST
  • பணிப் பெண்ணை அழைத்து உனக்கு எந்த ஊர் என்று கேட்டு உள்ளனர்
  • இருவரும் அதிரடியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் திருவள்ளூரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பிரபாகரன் தனது நண்பரான தியாகுவுடன் பயணம் செய்துள்ளார். இந்த விமானத்தில் சென்னை அனகாபுத்தூரில் வசித்து வந்த 25 வயதான பணிப்பெண் வேலை செய்து வருகிறார்.

பிரபாகரனும் தியாகுவும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் விமான பணிப் பெண்ணை அழைத்து உனக்கு எந்த ஊர் என்று கேட்டு உள்ளனர். இதற்கு பதில் அளித்த அவர் எனது சொந்த ஊர் மதுரை என்று கூறியுள்ளார். மதுரையில் ஆண்டிபட்டியா? இல்லை கல்லுப்பட்டியா? என கேட்டு இருவரும் கிண்டல் செய்துள்ளனர்.

இதற்கு பதில் அளிக்காத பணிப்பெண் அங்கிருந்து சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் பணிப் பெண்ணை ஏ இங்கு வா? என்று ஒருமையில் அழைத்து உள்ளனர். அவர்களது அழைப்பை ஏற்று பணிப்பெண் அருகில் சென்றதும் தி.மு.க. பிரமுகரான பிரபாகரன் பணிப் பெண்ணின் உடலில் கை வைத்து பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பணிப்பெண் இது தொடர்பாக பிரபாகரன் மற்றும் தியாகு இருவர் மீதும் மீனம்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தி.மு.க. பிரமுகரான பிரபாகரன் மற்றும் அவரது நண்பரான தியாகு ஆகிய இருவரும் அதிரடியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

பிரபாகரன் திருவள்ளூர் நகராட்சி 6-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தி.மு.க. பிரமுகர் கைதாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News