ஆடு மேய்க்க சென்ற சிறுமியை மிரட்டி கற்பழித்த 60 வயது முதியவர்-சித்தப்பா போக்சோவில் கைது
- சிறுமி கற்பழிப்பு தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
- சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆறு மாதங்களாக 3 பேர் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்தது தெரியவந்தது.
குளித்தலை:
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமகாதானபுரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் தரகம்பட்டி அருகே கோட்டக்கரையான் பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி அருகில் உள்ள சோளக்காட்டில் ஆடு மேய்ப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவரை செங்குளத்தைச் சேர்ந்த பெரியசாமி (60) என்பவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை பார்த்த சிறுமியின் சித்தப்பா முறையுள்ள இடும்பன் (31) என்பவரும், பெரியசாமியுடன் சேர்ந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவருக்கும் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அவரும் சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களாக இவர்கள் 3 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் ரீதியான உறவில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்படி, அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் 3 பேரும் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் அவர்கள் 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் கரூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.