கோவையில் ஆசிரியை கண்டித்ததால் விஷம் குடித்த மாணவர்
- நித்தீஷ் பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.
- அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள கருவலூரை சேர்ந்தவர் மணியன். இவரது மகன் நித்தீஷ் (வயது 15).
இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று நித்தீஷ் மாலை 5 மணியளவில் பள்ளி வளாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கைப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அறிவியல் ஆசிரியை, மாணவர் விளையாடுவதை பார்த்தார்.
பின்னர் அவர் நித்தீஷின் அருகே சென்று அவரது சட்டையை பிடித்து இழுத்து வந்து பள்ளிக்கு வெளியே விட்டார். அனைத்து மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியை இப்படி நடந்து கொண்டதால் மாணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.
வீட்டிற்கு சென்ற நித்தீஷ் ஆசிரியையின் இந்த செயலால் மிகுந்த மனவேதனை அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் தங்களது மகனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நித்தீஷை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.