உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் 3-வதுநாளாக நீடிக்கும் கடல் சீற்றம்: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

Published On 2024-09-04 11:31 IST   |   Update On 2024-09-04 11:31:00 IST
  • ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.
  • படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, கடல் சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அதன்படி அமாவாசை முடிந்த 3-வது நாளான இன்று காலை முதல் கன்னியாகுமரி கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.

விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் இந்த நிலை காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடற்கரைக்குச் செல்ல போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி கடலில் இறங்கியவர்களை சுற்றுலா போலீசார் வெளியேற்றினர்.

பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

அதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம்செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

Tags:    

Similar News