சேலம் அருகே ரூ.15 கோடி நிலம் ஆக்கிரமிப்பு
- உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் உள்பட 15 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
- எங்கள் 15 பேருக்கு சொந்தமான அந்த நிலத்தை நெத்திமேடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டு வேலி போட்டு உள்ளார்.
சேலம்:
சேலம் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஜனகராஜ் உள்பட 15 பேர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்துவிட்டு அவர்கள் கூறியதாவது,
சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 56 சென்ட் நிலம் உள்ளது. எங்கள் 15 பேருக்கு சொந்தமான அந்த நிலத்தை நெத்திமேடு பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் அபகரித்துக் கொண்டு வேலி போட்டு உள்ளார்.
இது குறித்து கேட்டபோது 100-க்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து எங்களை அடித்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். தி.மு.க. பிரமுகர் என்பதால் எங்கு சென்று புகார் தெரிவித்தாலும் நட வடிக்கை எடுக்க மாட்டார்கள் என மிரட்டுகிறார்.
எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டுத் தந்து கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.