மாணவரை தாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் மீது வழக்கு
- சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
- மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று பள்ளி யின் 7-ம் வகுப்பு ஆசிரியர் அன்புமணி 6-ம் வகுப்பிற்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவரின் சட்டையை கழற்ற வைத்து முதுகில் சரமாரியாக அடித்துள்ளார். மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவரின் முதுகு வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அவனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் ஆசிரியர் அன்புமணி மீது ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் அன்புமணி மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.