உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே காட்டுப்பகுதியில் மூதாட்டி அடித்து கொலை

Published On 2022-07-16 09:14 GMT   |   Update On 2022-07-16 09:14 GMT
  • ஆறுமுகம் இறந்துவிட்டதால் காளியம்மாள் மட்டும் தனியாக இருந்து வந்தார்.
  • அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நெல்லை:

கடையம் அருகே உள்ள துப்பாக்குடி இந்திரா காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காளியம்மாள் (வயது 67).

இவர்களது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஆறுமுகம் இறந்துவிட்டதால் காளியம்மாள் மட்டும் தனியாக இருந்து வந்தார்.

நேற்று காலை இவர் அரிவாளுடன் காட்டு பகுதியில் விறகு எடுக்க சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் அக்கம் பக்கத்தினர் காட்டு பகுதிக்கு சென்று காளியம்மாளை தேடி பார்த்தனர். அப்போது ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள பனங்காட்டு பகுதியில் காளியம்மாள் பிணமாக கிடந்தார்.

உடனே ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

காளியம்மாளின் காது பகுதியில் இருந்து ரத்தம் வடிந்தது. அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. இதனால் அவரை யாரோ அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மூதாட்டியை கொலை செய்த மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரிடம் இருந்து நகைகளை பறிப்பதற்காக மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News