உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த நர்ஸ் திடீர் சாவு

Published On 2023-09-11 15:21 IST   |   Update On 2023-09-11 15:21:00 IST
  • வீட்டில் இருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காட்டூர் ஜெகநாதன் லே-அவுட்டை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி செல்வராணி (வயது 52). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

செல்வராணிக்கு கர்ப்பபையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது கர்ப்பபையை ஆபரேசன் செய்து அகற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறினர். இதனையடுத்து செல்வராணி திருப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு டாக்டர்கள் ஆபரேசன் செய்து கர்ப்பபையை அகற்றினர். பின்னர் வீட்டிற்கு திரும்பினார். நேற்று வீட்டில் இருந்த செல்வ ராணிக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினார்.

இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக செல்வராணியை மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் செல்வராணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News