நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் படுகாயம்
- இன்று மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
- வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நெல்லை:
ஆசியா விலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெயரை பெற்றது நெல்லை சந்திப்பில் இருந்து டவுனை நோக்கி செல்லும் பாலமாகும். நெல்லை, பாளை ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் இந்தப் பாலத்தை கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் ரூ. 2 கோடியே 85 லட்சம் செலவில் பராமரிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதில் பாலத்தின் கீழ் பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற கொக்கிரகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 63) என்ற முதியவர் தலையில் கல் விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரடுக்கு மேம்பாலத்தில் முறையான பராமரிப்பு பணிகள் செய்யாததே விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இது குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.