உள்ளூர் செய்திகள்

துணை மேயர் கே.ஆர்.ராஜூவிடம் மனு கொடுத்த திராவிடர் தமிழர் கட்சியினர்.

நெல்லை மாநகராட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் கோரிக்கை

Published On 2023-09-26 09:06 GMT   |   Update On 2023-09-26 09:06 GMT
  • நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடை பெறவில்லை.
  • ரகுமத் நகர் பகுதியில் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர். ராஜூ கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மனு

55-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் முத்து சுப்பிரமணியன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாநகராட்சி கூட்டம் கடந்த மாதம் நடை பெறவில்லை. இந்த மாதமும் இதுவரை நடைபெற வில்லை. இதனால் மக்கள் குறைகளை மன்ற கூட்டங்களில் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத காரணத்தால் ஏராளமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அடிப்படை தேவையான குடிநீர் சரிவர கிடைக்காததற்கு காரணம் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததே காரணம். எனவே உடனடியாக மாநகராட்சி கூட்டத்தை நடத்தி, பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திராவிடர் தமிழர் கட்சி

திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் திருகுமரன் கொடுத்த மனுவில், நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விநாயகர் சிலைகளை கரைக்கும் பணியில் தச்சை மண்டலம் வண்ணார்பேட்டை பகுதியில் தூய்மை பணியில் வடிவேல் முருகன் என்பவரை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தி உள்ளனர்.

இதனால் அவர் உடல்நலக்குறைவால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே அவரை கட்டாயப்படுத்திய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

சீரான குடிநீர்

5-வது வார்டு கவுன்சிலர் ஜெகநாதன் கொடுத்த மனுவில், எங்கள் வார்டு பகுதியில் சீரான குடிநீர் வழங்கி 1 மாதத்திற்கும் மேலாகிறது. ரகுமத் நகர் பகுதியில் தண்ணீர் திறப்பாளராக பணியாற்றியவர் மாற்றப்பட்டு வேறொருவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரும் தற்போது மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். இதனால் தண்ணீர் திறக்க ஆளின்றி குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News