உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ஏகாட்சர மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-08-25 14:19 IST   |   Update On 2022-08-25 14:19:00 IST
  • ஆண்டு தோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்
  • முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு மேள தாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க கொடியேற்றப்பட்டது

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் ஸ்ரீ ஏகாட்சர மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கொடி மரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு மேள தாளங்கள், பஞ்ச வாத்தியங்கள், மங்கள இசை முழங்க கொடியேற்றப்பட்டது. சங்கர் பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தனர். அதன்பிறகு கொடிமரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர பொதுச்செயலாளர் பானுதாஸ், துணைத் தலைவர் அனுமந்தராவ், நிர்வாக செயலாளர் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன், விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்ம நாபன், மற்றும் திர ளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இரவு 18 கால யாகசாலை பூஜை தொடங்கியது. திருவிழா வருகிற 31-ந்தேதி வரை10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவை யொட்டி தினமும் காலையில் யாகசாலை பூஜை, அபிஷேகம், தீபாராதனை போன்றவை களும் நடக்கிறது. 7-ம் திருவிழாவான 28-ந் தேதி காலையில் 108 கலச அபிஷேகமும் அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடக்கிறது.

10-ம் திருவிழாவான 31-ந்தேதி காலை 8 மணிக்கு விநாயகருக்கு 21 வகையான அபிஷேகங்களும், 10.30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, சாயராட்சை தீபாராதனை, உற்சவமூர்த்தி அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது. 6.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (1-ந்தேதி) காலை 7 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்த புரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரையில் விநாயகருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் கேந்திர நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News