உள்ளூர் செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-08-21 09:05 GMT   |   Update On 2022-08-21 09:05 GMT
  • விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
  • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கோடை விடுமுறை சீசன் முடிந்த பிறகும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் ஏராள மானோர் படை எடுத்த வண்ணமாக உள்ளனர்.

அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

விவேகானந்தர் நினைவு மண்டபத்தைபார்வையிட இன்று காலை 6மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.காலை 7.45 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி யதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

இன்று காலை 11 மணி வரை 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில்சென்று பார்வையிட்டு இருந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள்படகில் பயணம் செய்யும் போது செல்போன் மூலம் திருவள்ளுவர் சிலையை படம் எடுத்து சென்றனர்.

கன்னியா குமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கட லோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்கா ணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.

Tags:    

Similar News