உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி

தக்கலை அருகே சொகுசு காரில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2022-10-11 08:10 GMT   |   Update On 2022-10-11 08:10 GMT
  • நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல்
  • மேட்டுக்கடை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அந்த கார் சிக்கிக்கொண்டது.

கன்னியாகுமரி:

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணை ஆகியவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். எனினும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமாருக்கு நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் தக்கலை பகுதி மற்றும் புலியூர்குறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை வழி மறித்தனர். காரை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றார். எனினும் அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்றனர். இதையடுத்து மேட்டுக்கடை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அந்த சொகுசு கார் சிக்கிக்கொண்டது.

இதனால் டிரைவர் சொகுசு காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் சொகுசு காரை சோதனை செய்தனர். சோதனையில் 35 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வருவாய் ஆய்வாளர் விஜிமாறன், வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் ஆகியோர் குளச்சலில் உள்ள கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News