உள்ளூர் செய்திகள்

மேலச்செவல் கிராமத்தில் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். (உள்படம்) பலியான விஜயகுமார்

ஆட்டோ டிரைவர் கொலையில் 7 பேரிடம் விசாரணை- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்

Published On 2023-09-18 09:03 GMT   |   Update On 2023-09-18 09:03 GMT
  • ஆட்டோவை வழிமறித்த மர்ம கும்பல் விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்தது.
  • கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள மேலசெவல் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 64). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

வெட்டிக்கொலை

இவர் நேற்று முன்தினம் இரவு கரிசல்பட்டி சாலையில் நதிநீர் இணைப்பு கால்வாய் பகுதியில் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் ஆட்டோவை வழிமறித்து விஜயகுமாரை வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார். கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் மேலச்செவல் கிருஷ்ணன் கோவிலில் மது அருந்தி யவர்களை தட்டிக்கேட்டது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் ஜாமீனில் வெளிவந்து, ஊரை காலி செய்துவிட்டு சென்று விட்டனர். அதில் ஒருவரின் உறவினர் தான் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள விஜயகுமார் என்பதால் பழிக்குப்பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

7 பேரிடம் விசாரணை

இதுதொடர்பாக அதே ஊரை சேர்ந்த 7 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே குற்றவாளி களை கைது செய்யும் வரை விஜயகுமாரின் உடலை வாங்க வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து விட்டனர். அவர்களிடம் போலீசார், தாசில்தார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயகுமார் மகனுக்கு அரசு வேலை, ரூ.1 கோடி நிவாரணம், கொலை யாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை அவரது உறவினர்கள் விதித்தனர்.

அதனை எழுத்து பூர்வமாக எழுதி வாங்கி அரசுக்கு பரிந்துரை செய்வதாக தாசில்தார் தெரிவித்துள்ளார். எனினும் இன்றும் 2-வது நாளாக அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News