கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது எடுத்த படம்.
கிருஷ்ணகிரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- பொதுமக்கள் ஊராட்சி மன்றத்தில் புகார் தெரிவித்தனர்.
- கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகராட்சி அருகில் உள்ளது கட்டி கானப்பள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலை பகுதியில் ஆக்கிர மிப்புகள் அதிகமாக இருந்தன.
இதனால் அந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நடந்தன. உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்றத்தில் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள ஆக்கிர மிப்புகளை தாங்களாக அகற்றிட ஊராட்சி மன்றம் சார்பில் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதையொட்டி ராயக்கோட்டை மேம்பாலம் முதல் கிருஷ்ணகிரி ஒருங்கி ணைந்த நீதிமன்றம் வரையில் சாலையின் இருபுறமும் கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் மூலம் அகற்றப்பட்டன. இதில் போர்டுகள், பேனர்கள், ஷெட்டுகள் ஆகியவை அகற்றப்பட்டன. போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் கூறுகையில், இன்றைய தினம் 300-க்கும் மேற்பட்ட கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் யாரேனும் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆக்கிரமிப்புகள் அகற்றும் போது தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் அமர்நாத், செல்வராஜ், மதியழகன் மற்றும் போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஊராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.