கோவையில் நடுரோட்டில் குதிரைகளின் பாசப்போராட்டம்
- வாகனம் மோதி உயிருக்கு போராடிய குதிரையை காப்பாற்ற முடியாமல் மற்றொரு குதிரை கண்ணீர் வடித்தது.
- மெத்தன போக்கால் குதிரை அப்புறப்படுத்தப்படாமல் அதே இடத்தில் கிடந்தது.
குனியமுத்தூர்,
சுந்தராபுரம் -மதுக்கரை மார்க்கெட் சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதன் அருகே ஒரு குதிரை வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடியது.
இதை பார்த்த மற்றொரு குதிரை அதன் அருகே சென்று சோகத்துடன் நின்றது. சக தோழனை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்துடன் அந்த குதிரை கண்ணீர் வடித்தபடி அங்கும், இங்கும் சென்றது.
குதிரைகளின் இந்த பாசப்போராட்டம் அந்த வழியாகச் சென்றவர்களை கண்ணீர் வடியச் செய்தது. அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கோவை மாநகராட்சி மட்டுமன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து விட்டோம். ஆனால் இதுவரை யாரும் குதிரையை அப்புறப்படுத்த வரவில்லை.
சுந்தராபுரம் சாலையில் அடிபட்டு கிடக்கும் குதிரை யை அப்புறப்படுத்தி, கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தால் அது உயிர்பிழைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிகாரிகளின் மெத்தன போக்கால் இன்னும் அந்த குதிரை அப்புறப்படுத்தப்படாமல் அதே இடத்தில் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது என்று வேதனை தெரிவித்தனர்.