உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலின் பிரதான அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலில் கனரக வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல்

Published On 2022-07-02 05:20 GMT   |   Update On 2022-07-02 05:20 GMT
  • கொடைக்கானலில் பிரதான பகுதியான அண்ணா சாலையில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
  • மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் காக்க விரைவான தீர்வை மேற்கொள்ள வேண்டும்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் அண்ணா சாலை நகரின் பிரதான பகுதியாக உள்ளது. இந்த சாலையில் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை 10 மணிக்கு மேல் அன்றாட பணிகளுக்கு செல்வோர், அலுவலக வேலைக்கு செல்வோர் என பலரும் இவ்வழியில் செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது.

இவ்வழியில் சரக்கு வாகனங்களை இயக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்க ப்பட்டுள்ளது. ஆனால் சரக்கு வாகன ஓட்டுனர்கள் அவர்கள் நினைத்த நேரத்தில் இவ்வழியாக வாகனத்தை இயக்குவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையின் இருபுறங்களிலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திச் செல்வதால் அத்தியாவசிய பணிக்கு செல்வோர் கடும் அவதி அடைகின்றனர்.

ஒரு வழிச் சாலையாக இந்த சாலை மாற்ற ப்பட்டிருந்தாலும் விதியை முறையாக யாரும் பின்பற்றுவது இல்லை.இதுவும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணமாக உள்ளது. போக்குவரத்து போலீசார் ஒரு வழி பாதையில் செல்வோர் மற்றும் பார்க்கிங் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ள அண்ணா சாலை பகுதியில் வாகனங்களை நிறுத்துவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் மூஞ்சிக்கல் பகுதியில் கொடைக்கானல் - வத்தலகுண்டு செல்லும் பிரதான சாலையின் விரிவாக்க பணி என்ற பெயரில் சாலை ஓரம் அமைக்கப்பட்டிருந்த கடைகள் நெடுஞ்சாலைத்து றையால் பல மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது. ஆனால் இன்று வரை சாலை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது.

மூஞ்சிக்கல் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலக பகுதிக்கு அருகிலேயே பிரதான சாலையில் கடைகள் முன்பு மணல், ஜல்லி, செங்கல் போன்றவைகளை கொட்டி ஆக்கிரமிக்கப்பட்டு வியாபாரங்கள் நடு ரோட்டிலேயே நடைபெற்று வருகிறது. இதனை நெடுஞ்சாலை துறையினரும் போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்ளாததால் உயிர் பலி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மூஞ்சிக்கல் பகுதியில் பிரதான சாலையின் இரு புறங்களிலும் கனரக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால் சாலையின் வளைவு பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் நெடு ஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் கண் துடைப்புக்காக சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

ஆனால் பிரதான சாலைகளில் காய்கறி வியாபாரங்கள்செய்து வருகின்றனர். இதனை வாங்குவதற்கு சாலையி லேயே சுற்றுலா பயணி கள் வாகனங்களை நிறுத்துவதால் போக்கு வரத்து நெரிசலும் விபத்தும் ஏற்பட்டு வருகிறது.

முறையான பார்க்கிங், கழிப்பறை வசதி இல்லை. ஆனால் பிரதான நெடுஞ்சாலைகளில் இடையூறு இல்லாமல் வாகனங்கள் செல்வதற்கு வழியும் இல்லை என சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டிச்செல்கின்றனர். மாவட்ட நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் காக்க விரைவான தீர்வை மேற்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News