உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடைகால இலவச பயிற்சி முகாம்

Published On 2023-04-28 07:46 GMT   |   Update On 2023-04-28 07:46 GMT
  • 2023-ம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
  • வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், 2023-ம் ஆண்டிற்கு, நாமக்கல் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள, மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகிற மே 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை இப்பயிற்சி நடைபெறும். தினசரி காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கையுந்துபந்து, கபாடி, வாள்சண்டை மற்றும் வில்வித்தை ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

இந்த பயிற்சி முகாமில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

மாணவரல்லாத, விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களும் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேரடியாக பதிவு செய்து கொள்லாம் அல்லது dsonmk@gmail.com என்ற இமெயில் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News