தமிழ்நாடு செய்திகள்

வரலாற்றை கொண்ட கொள்ளிடம் புலீஸ்வரி அம்மன் கோவில் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

Published On 2026-02-23 11:06 IST   |   Update On 2026-02-23 11:06:00 IST
  • இத்தலம் சங்க கால இலக்கியங்களான அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.
  • இக்கோவிலின் சிறப்புகள் உலக சாதனை அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புலீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் 108 சக்தி தலங்களில் 50-வது தலமாக விளங்குகிறது.

உலகிலேயே 'புலீஸ்வரி அம்மன்' என்ற பெயரில் அமைந்துள்ள ஒரே தலம் இதுதான் என்பது விரிவான ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இத்தலம் சங்க கால இலக்கியங்களான அகநானூறு மற்றும் சிலப்பதிகாரத்துடன் நெருங்கிய தொடர்புடையதாகும்.

இந்திய தொல்பொருள் ஆய்வு துறையின் ஆவணங்களின்படி, இக்கோவில் 150 ஆண்டு கால ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை கொண்டுள்ளது. கொள்ளிடம் ஆன்மிக பற்றாளர் பிரபு என்பவரின் முயற்சியால், இக்கோவிலின் சிறப்புகள் உலக சாதனை அங்கீகாரத்திற்கு அனுப்பப்பட்டது.

இவற்றை சரிபார்த்த ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் இக்கோவில் தனித்துவமான, உலகளாவிய பெயரிடல் மற்றும் பண்டைய இலக்கிய மரபு என்ற பிரிவின்கீழ் இதற்கான உலக சாதனை அங்கீகாரத்தை வழங்கி சிறப்பித்து உள்ளது. இதனை அறிந்த பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News