- நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் போராடி வந்தனர்.
- நில எடுப்புக்கு தவறாக நிர்ணயிக்கப்பட்ட விலையை ரத்து செய்ய வேண்டும்.
நாகப்பட்டினம்:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல், நாகை மாவட்டம் நாகூர், பனங்குடி, முட்டம் ஆகிய இடங்களில் இயங்கி வருகிறது. இந்த ஆலை விரிவாக்கத்திற்காக, பனங்குடி, கோபுராஜபுரம், நரிமணம், உத்தமசோழபுரம், முட்டம் ஆகிய ஊராட்சிகளில் 622 ஏக்கர் நில எடுப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நில எடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அந்நிறுவனம் குறைந்த விலைக்கு நிலங்களை கையகப்படுத்துவதால் நில உரிமையாளர்கள் போராடி வந்தனர். பனங்குடி கிராமத்தில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் முன்பு நிலத்தின் உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும்,
நில எடுப்புக்கு தவறாக நிர்ணயிக்கப்பட்ட விலையை ரத்து செய்ய வேண்டும், என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினார். போராட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு முன்பு புதிய நில எடுப்பு 2013ம் ஆண்டு சட்டப் பிரிவை பயன்படுத்த வேண்டும் என்றும், தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.