திருத்தணி அருகே லாரியில் சிக்கி ஆந்திர விவசாயி பலி
- லாரியை முந்தி செல்ல முயன்றபோது லாரி எதிர்பாராதவிதமாக சுப்பராம ராஜூ மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- மோட்டார் சைக்கிளில் உடன் வந்த கேசவலு சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.
திருத்தணி:
ஆந்திர மாநிலம், புத்தூர் அடுத்த வடமால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுப்பராம ராஜூ (வயது 52). விவசாய கூலி தொழிலாளி.
இவர் நேற்று தனது நண்பரான கேசவலு (வயது 50) என்பவருடன் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருத்தணி பைபாஸ் ரவுண்டானா அருகே, முன்னே சென்றுக்கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றபோது லாரி எதிர்பாராதவிதமாக சுப்பராம ராஜூ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பராம ராஜூ லாரி டயரில் சிக்கி படுகாயமடைந்தார்.
அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சுப்பு ராம ராஜூ பரிதாபமாக இறந்து போனார்.
மோட்டார் சைக்கிளில் உடன் வந்த கேசவலு சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.