உள்ளூர் செய்திகள்

சிறப்பான சிகிச்சை: பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று

Published On 2023-04-09 07:18 GMT   |   Update On 2023-04-09 07:18 GMT
  • ஆஸ்பத்திரியில் 20 டாக்டர்கள் 26 செவிலியர்கள் 4 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
  • தரம் மற்றும் சிகிச்சை, பயன்பாடுகள் கண்டறிந்து மதிப்பெண் அடிப்படையில் 88.82 சதவீதம் மத்திய குழுவினரால் வழங்கப்பட்டன.

பொன்னேரி:

பொன்னேரியில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் பொது அறுவை சிகிச்சை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, குழந்தை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, காது மூக்கு தொண்டை பிரிவு, மகப்பேறு மருத்துவம், டயாலிசிஸ், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பிரிவு, பல் மருத்துவம், தோல் மருத்துவம், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம், 24 மணி நேர ஆய்வகம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், 24 மணி நேரம் செயல்படும் விபத்து சிகிச்சை பிரிவுகள் உள்ளன.

ஆஸ்பத்திரியில் 20 டாக்டர்கள் 26 செவிலியர்கள் 4 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16,17, 18-ந்தேதிகளில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் மருத்துவர்கள் அருண்குமார்ரஸ்தோகி, சுனிதா பாலிவால், வைஷாலி தட்டாத்ரியா, ஆகிய மூவர் அடங்கிய குழுவினர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் விபத்து பிரிவு, பொது மருத்துவம், ஆய்வகக் கூடம், நுண்கதிர் பிரிவு, சமையல் கூடம், உணவின் தரம், மகப்பேறு பிரிவு, உள்ளிட்ட 13 துறைகளை ஆய்வு செய்தனர். அவற்றின் தரம் மற்றும் சிகிச்சை, பயன்பாடுகள் கண்டறிந்து மதிப்பெண் அடிப்படையில் 88.82 சதவீதம் மத்திய குழுவினரால் வழங்கப்பட்டன.

இதன் அடிப்படையில் 2023-ம் ஆண்டிற்கான தேசிய தரச்சான்று பொன்னேரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் அசோகன் தெரிவித்தார்.

Tags:    

Similar News