உள்ளூர் செய்திகள்

தின்னரை ஊற்றி இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2023-05-11 09:11 GMT   |   Update On 2023-05-11 09:11 GMT
  • தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார்.
  • இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

ஈரோடு:

ஈரோடு பெரிய சேமூர், வேல் நகரை சேர்ந்தவர் கோபி ராஜா. இவரது மனைவி மோனிஷா (23). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இந்நிலையில் கோபிராஜா குடி போதைக்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இவ்வாறு சண்டை வரும் போதெல்லாம் மோனிஷா கணவருடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். இதேபோல் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மோனிஷா கணவருடன் சண்டை போட்டு கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதன் பின்னர் கோபி ராஜாவின் தாய், தந்தை சமாதானம் பேசி மீண்டும் மோனிஷாவை கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று கோபிராஜா மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோனிஷா இப்படியே குடித்துக்கொண்டு இருந்தால் வீட்டு வாடகை, வண்டி தவணை எப்படி கட்ட முடியும் என்று கணவரிடம் கேட்டுள்ளார்.

இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் செத்து விடுவேன் என்று கூறி மோனிஷா வேகமாக வீட்டின் பின்புறம் சென்றார்.

அங்கு இருந்த தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிராஜா தீயை அணைத்து மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மோனிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுக்குள் ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News