மயிலாடுதுறையில் ரூ.2 கோடி மதிப்பு தங்கக்கட்டியுடன் மாயமான சிறுவன் கைது
- 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
- ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
குத்தாலம்:
மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் தங்கம் உருக்கும் தொழில் கூடம் உள்ளது. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரிடம் அதே மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்ற 17 வயது சிறுவன் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில், சுஹாஷ் மற்றும் ஓம்கார் மட்டும் நேற்று கடையில் இருந்துள்ளனர். அப்போது சுமார் 1½ கிலோ தங்க நகைகளை உருக்கி, அதனை தங்க கட்டியாக மாற்றிய சுஹாஷ், அதனை எடை போட்டு எடுத்து வருமாறு சிறுவன் ஓம்காரிடம் கொடுத்துள்ளார். அதனை எடுத்துக்கொண்டு கடையின் முகப்பு பகுதிக்கு வந்த ஓம்கார், திடீரென மனம் மாறி தங்க கட்டியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடி தலைமறைவானார். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
உடனடியாக இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை லாவகமாக மடக்கி கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்த 1½ கிலோ தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.