கோபி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
- கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறாதது குறித்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கேள்வி கேட்டார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 21 கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் சவண்டப்பூர், அம்மா பாளையம், மேவாணி, பெருந்தலையூர், பொம்மநாய்க்கன் பாளையம், பொலவக்காளி பாளையம், கடுக்காம் பாளையம், சந்திராபுரம் ஆகிய 8 ஊராட்சிகளும், கூகலூர் மற்றும் பி.மேட்டுப்பாளையம் ஆகிய 2 பேரூராட்சிகளும் அந்தியூர் தொகுதிக்குள் அடங்கியுள்ளது.
இது சம்பந்தமான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
ஆய்வு கூட்டத்தில் கோபி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தர வடிவேல், சக்திவேல், ஊராட்சி ஒன்றிய பொறியாளர், 8 ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்தில் 8 ஊராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெறாதது குறித்து ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கேள்வி கேட்டார்.
அதைத்தொடர்ந்து கோபி யூனியனில் உள்ள 21 ஊராட்சிகளில் 13 ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தும் அதிகாரிகள் 8 ஊராட்சிகளில் போதிய கவனம் செலுத்தி வளர்ச்சி பணிகளை முடிக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில் இது போன்று பணிகள் தொடங்காமல் இருந்தால் அந்த பணிகள் ரத்து செய்யப்பட்டு வேறு ஊராட்சிகளுக்கு வழங்கும் நிலை ஏற்படும். அதே போன்று தொடங்கிய பணிகளும் முழுமையாக போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும்.
அலுவலக அதிகாரிகள் மற்ற ஊராட்சிகளுக்கு பணி வழங்குவது போன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குள் உள்ள 8 ஊராட்சிகளுக்கும் பணிகளை வழங்குவதோடு, விரைந்து முடிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.