உள்ளூர் செய்திகள்
நெல்லையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் திடீர் சாவு
- ரிஷி ஆச்சார்யா குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர்.
- நள்ளிரவில் ரிஷி ஆச்சார்யாவுக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை-சேரன்மகாதேவி சாலையில் அமைந்துள்ள சாஸ்திரிநகரை சேர்ந்தவர் வினோத் கண்ணன். இவரது மகன் ரிஷி ஆச்சார்யா (வயது 20). இவரது குடும்பத்தினர் மும்பையில் வசித்து வருகின்றனர்.
ரிஷி ஆச்சார்யா சாஸ்திரிநகரில் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். நேற்றிரவு வழக்கம் போல் வீட்டில் உறவினர்களுடன் அமர்ந்து ரிஷி தோசை சாப்பிட்டுள்ளார்.
பின்னர் தூங்க சென்ற அவருக்கு நள்ளிரவில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு இன்று அதிகாலையில் ரிஷி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.