வாகனங்களை மறித்து உணவு தேடும் யானைகள்
- இரண்டு பெரிய யானை மற்றும் ஒரு குட்டி யானை சாலையின் அருகே சுற்றி வருகின்றன.
- வாகனங்கள் சாலையில் செல்வதில் சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது
அரவேணு
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள முள்ளூர், மாமரம், குஞ்சப்பனை பகுதிகளில் பலாப்பழ சீசன் நடந்து கொண்டிருக்கிறது. பலாப்பழங்களை ருசிப்பதற்காக அந்த பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.
குஞ்சப்பனை பகுதியில் இரண்டு பெரிய யானை மற்றும் ஒரு குட்டி யானை சாலையின் அருகே சுற்றி சுற்றி வருகின்றன. அதுமட்டுமின்றி சாலையில் செல்லும் வாகனங்களை இடைமறித்து வாகனங்களை தாக்குவது, வாகனங்களில் சாப்பிடுவதற்கு ஏதாவது இருக்கிறதா என்று தேடும் செயலில் அந்த யானைகள் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அங்கு வாகன ஓட்டிகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் சாலையில் செல்வதில் சிரமமான சூழ்நிலை நிலவி வருகிறது
பகல் வேளையில் கூட இதுபோன்று சாலையில் செல்லும் வாகனங்களை யானைகள் வழிமறிப்பதால் வாகன ஓட்டிகள் தங்களை உயிரை காத்துக் கொள்ள வாகனங்களை நிறுத்தி விட்டு ஓடும் நிலை உள்ளது.
எனவே சாலையில் முகாமிட்டுள்ள யானைகளை அங்கிருந்து விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.