கோவையில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்பு குழு கூட்டம்
- கலெக்டர் பங்கேற்காததால் எம்.எல்.ஏ.க்கள் ஆதங்கம்
- கோவை எம்.பி.யிடம் நேரடியாக குற்றம்சாட்டினர்
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பி.ஆர் நடராஜன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்,மேயர் மற்றும் துணை மேயர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கோவை மாந கராட்சி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் இனி மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
வழக்கமாக இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஆனைமலை பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொள்வதற்காக சென்றிருப்பதால் இன்று நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
இதனால் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாதது குறித்து முகம் சுழித்து கொண்டனர்.
முக்கியமான கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொள்ளாதது கண்டனத்திற்குரியது என்பது போல் பேசினர். அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே ஆனைமலை பகுதியில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு சென்றதால், அவர் இதில் கலந்து கொள்ள வில்லை என தெரிவித்தார்.
இருப்பினும் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாததால் தங்களுடைய கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பார்கள் எனவும் தங்களது தேவைகளை யாரிடம் கூறுவது எனவும் கோபித்துக் கொண்டனர்