உள்ளூர் செய்திகள்

கலெக்டர் செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் கடன் மேளா-கலெக்டர் தகவல்

Published On 2022-07-30 13:39 IST   |   Update On 2022-07-30 13:39:00 IST
  • மகளிர் சுயஉதவிக்குழுக்கடன்கள் மற்றும் டாம்கோ, டாப்செட்கோ கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா வருகிற 8-ந்தேதி அனைத்து சங்க வளாகத்தில் நடக்கிறது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடன் மேளா

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலம் மாற்றுத் திறனாளிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பொருளாதார நிலையை உயர்த்தும் வகையில், டாம்கோ, டாப்செட்கோ கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் கடனை பொறுத்தமட்டில் உரிய தவணைக்குள் செலுத்தும் பட்சத்தில் கடனுக்கான வட்டி தொகை முழுவதும் தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பெறப்பட்டு கடன்தாரர்களது கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும். மகளிர் சுயஉதவிக்குழுக்கடன்கள் மற்றும் டாம்கோ, டாப்செட்கோ கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

உறுப்பினர் சேர்க்கை

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் மேளா வருகிற 8-ந்தேதி அனைத்து சங்க வளாகத்திலும், மகளிர் சுய உதவிக்குழு கடன் மேளா வருகிற 19-ந்தேதியும், டாம்கோ, டாப்செட்கோ கடன் 30-ந்தேதியும் நடக்கிறது. எனவே பொதுமக்கள், உறுப்பினர்கள் முகாம் நாட்களில் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி விண்ணப்பத்தை பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து கடன் பெறலாம்.

அதேபோன்று கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவர்கள் மேற்கண்ட முகாம் நாட்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் பெற்று ரூ.100 பங்குத்தொகையும், ரூ.10 நுழைவுக்கட்டணமும் செலுத்தி கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேரலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News