உள்ளூர் செய்திகள்

அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டம் சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தபோது எடுத்தபடம்.


சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா தொடர்பாக அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டம்-சேர்மன் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது

Published On 2022-07-15 09:43 GMT   |   Update On 2022-07-15 09:43 GMT
  • சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
  • திருவிழாவை முன்னிட்டு தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவதலமாகும். இங்கு அரியும், சிவனும் ஒன்று என்பதை கோமதி அம்மனுக்கு உணர்த்தும் வகையில் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரம் அன்று சிவபெருமான் சங்கரநாராயணராக கோமதிஅம்மனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

கொடியேற்றம்

இந்த நிகழ்வை காண இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வருவது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடித்தபசு திருநாள் நடத்தப்படாமல் இருந்தது. 2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இந்த ஆடித்தபசு திருநாள் 12 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. அன்று தென்காசி மாவட்டத்திற்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.

திருவிழா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலோசனை கூட்டம்

ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறையினர் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.

நகராட்சி துணை சேர்மன் கண்ணன் என்ற ராஜு, சங்கரன்கோவில் டவுன் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாசன், தாசில்தார் பாபு, சுகாதார ஆய்வாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தனர்.

தண்ணீர் பந்தல்

இதில் ஆடித்தபசு திருநாள் நடக்கும் காலங்களில் அனைத்து வீதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், விழா காலங்களில் மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்பட வேண்டும், தனியார் அமைப்புகள் அமைக்கும் தண்ணீர் பந்தலுக்கு நகராட்சி மூலம் தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

தேரோட்டம்

தேரோட்டம் நடைபெறும் நாளான ஆகஸ்ட் 8-ந்தேதி ரதவீதிகளை சுத்தப்படுத்தி தண்ணீர் தெளிக்க வேண்டும், சங்கரன்கோவிலில் நான்கு பகுதிகளிலும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும், திருவிழாவை முன்னிட்டு தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட வேண்டும்,

சிறப்பு பஸ்கள்

நகரில் உள்ள உணவு விடுதிகள் அனைத்தும் வெள்ளை அடித்து சுத்தம் செய்யப்பட்டு சுத்தமாக வைப்பதுடன் பொதுமக்களுக்கு கொதிக்க வைத்து ஆறிய குடிநீரை வழங்க வேண்டும், ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் நகராட்சி மேலாளர் மாரியம்மாள், நெடுஞ்சாலை துறை கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தங்கையா, உதவி பொறியாளர்கள் கருப்பசாமி, கணேஷ்ராமகிருஷ்ணன், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ், கோவில் கண் காணிப் பாளர் சந்திரசேகர், வட்டார போக்கு வரத்து அலுவலக ஆய்வாளர் ராஜன், குடிநீர் வடிகால் பொறியாளர் மயில் வாகனன், சங் கரன்கோவில் தாலுகா இன்ஸ் பெக்டர் மாதவன், அரசு போக்கு வரத்து கழக கண்காணி ப்பாளர் சரவண பிர பாகர், போ க்கு வரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் முருகன், உள்ளிட்ட அனைத்து துறையை சேர்ந்த வர்கள், நகரா ட்சி கவுன்சி லர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News