உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட சவுந்திரவள்ளி மற்றும்

கைதான கணவர் செல்வகுமாரை படத்தில் காணலாம்.


நெல்லை அருகே இளம்பெண் கொலையில் கைதான கணவர் வாக்குமூலம்

Published On 2022-07-10 09:31 GMT   |   Update On 2022-07-10 09:31 GMT
  • நேற்று மாலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் செல்வகுமார், சவுந்திரவள்ளியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
  • செல்வக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

நெல்லை:

நெல்லையை அடுத்த தேவர்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 35). டிரைவர்.

தகராறு

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சண்முகையா என்பவரது மகள் சவுந்திரவள்ளி(30) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.

செல்வக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் சவுந்திரவள்ளி தனது மகனுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கொலை

நேற்று மாலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் செல்வகுமார், சவுந்திரவள்ளியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். இதுதொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

அவரிடம் மானூர் வட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி நடத்திய விசாரணையில் அவர் வாக்குமூலமாக கூறியதாவது:-

எங்களுக்குள் அடிக்கடி ஏற்பட்ட தகராறு காரணமாக சவுந்திர வள்ளி என்னுடன் வாழ மறுத்து பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதன்பின்னர் நான் பலமுறை அவரை குடும்பம் நடத்த அழைத்துள்ளேன். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை.

ஆத்திரம்

இந்நிலையில் நேற்று முன்தினம் எனது மகனுக்கு பிறந்தநாள். அதற்காக குழந்தையை எங்கள் வீட்டுக்கு அழைத்து செல்ல எனது மனைவியிடம் கேட்டேன். அவள் தர மறுத்துவிட்டாள்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து என்னை சமாதானம் செய்து அனுப்பி வைத்து விட்டனர். இந்த சம்பவம் எனக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. இதனால் நேற்று மதுகுடித்துவிட்டு சென்று அவரிடம் சண்டையிட்டேன். அப்போது ஆத்திரத்தில் அவரை வெட்டிக்கொலை செய்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து செல்வக்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags:    

Similar News