உள்ளூர் செய்திகள்

கோவையில் இன்ஸ்டாகிராம் காதலனுடன் கல்லூரி மாணவி ஓட்டம்

Published On 2023-06-11 09:19 GMT   |   Update On 2023-06-11 09:19 GMT
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலனின் பெற்றோர் மாணவியை பெண் கேட்டு வீட்டிற்கு வந்தனர்.
  • இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் காரமடையில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். அப்போது அவர்களிடம் மாணவி தான் இனிமேல் காதலனுடன் பேச மாட்டேன் என கூறினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலனின் பெற்றோர் மாணவியை பெண் கேட்டு வீட்டிற்கு வந்தனர்.

ஆனால் மாணவியின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து விட்டனர். சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடினர்.

அப்போது மாணவி தனது இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News