உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே பட்டாசு வெடித்த தகராறில் மோதல்; 3 பேர் கைது

Published On 2023-08-08 08:48 GMT   |   Update On 2023-08-08 08:48 GMT
  • மாவடி ஆர்ச்விளை தெருவை சேர்ந்த சுவாமிதாஸ் மகன் தீபக் பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்டார்.
  • இதில் ஏற்பட்ட தகராறில் மாவடி வடக்குத்தெருவை சேர்ந்த ராபீன் , பிராங்ளின் ஆகியோர் தீபக்கை கல்லால் தாக்கினர்.

களக்காடு:

ராகுல்காந்தி எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் சென்றதை அடுத்து களக்காடு அருகில் உள்ள மாவடி பஸ் நிறுத்தம் அருகே காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மாவடி ஆர்ச்விளை தெருவை சேர்ந்த சுவாமிதாஸ் மகன் தீபக் (வயது32) பட்டாசு வெடித்ததை தட்டிக் கேட்டார்.

இதில் ஏற்பட்ட தகராறில் மாவடி வடக்குத்தெருவை சேர்ந்த நவநீதன் மகன் ராபீன் (28), ரெத்தினம் மகன் பிராங்ளின் (46) ஆகியோர் தீபக்கை கல்லால் தாக்கினர். இதுபோல தீபக் ராபீனை கீழே தள்ளினார். இந்த மோதலில் தீபக், ராபீன் காயமடைந்தனர். இதுகுறித்து இருவரும் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராபீன், பிராங்ளின், தீபக்கை கைது செய்தனர்.

Tags:    

Similar News